அங்கீகரிக்கப்படாத நிர்மாணங்களை தடுக்கும் வகையில் எதிர்காலத்தில் உள்ளூராட்சி சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டு வரப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தற்போதுள்ள தடைகள் அகற்றப்பட்டு, அனுமதியற்ற கட்டுமானங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அக்குறணை உள்ளூராட்சி சபையில் இருந்து மதிப்பீட்டு வரிகள் உட்பட உள்ளுராட்சி மன்றங்களுக்கான அனைத்து கொடுப்பனவுகளையும் இணையவழியில் செலுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் தேசிய வைபவத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டம் மக்கள் வங்கியுடன் இணைந்து அமுல்படுத்தப்படுவதுடன் உள்ளுராட்சி மன்ற வரிகள் உட்பட சகல கொடுப்பனவுகளையும் இணையத்தளத்தில் மேற்கொள்ள முடியும்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், 346 உள்ளூராட்சி மன்றங்களில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும், அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இணையத்தளத்தில் பணம் செலுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோத நிர்மாணங்களை தடுக்கும் வகையில் அரச நிறுவனங்களுக்கிடையில் கடிதப் பரிமாற்றம் நடைபெறும் காலப்பகுதியில் நிர்மாணங்கள் இடம்பெறுவதாகவும் அவற்றை அகற்றும் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது குடும்பங்கள் அங்கு வாழ்வதனால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.