Monday, May 6, 2024

வவுனியா வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் பல தரப்பினரிடம் விசாரணை!

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வைத்து ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள மனிதவுரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு இன்று (24.04) அழைக்கப்பட்ட நெடுங்கேணிப் பொலிசார், வனவளத் திணைக்களத்தினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், வாக்கு மூலமும் பெறப்பட்டது.

இதன்போது, வனவளத் திணைக்களத்தினர் தாம் அங்கு சென்று பார்த்த போது தமது வனப் பகுதிக்குள் தீ மூடப்பட்டிருந்ததாகவும், பிளாஸ்ரிப் பொருட்கள், சமையல் கழிவுகள், ஆலய பூசைப் பொருட்கள் அங்கு கொட்டப்பட்டிருந்ததாகவும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தனர்.

பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கும் போது தொல்பொருள் திணைக்களத்தின் கடிதத்தின் பிரகாரமும், வனப் பகுதிக்குள் தீ மூட்டப்பட்டமை காரணமாகவும் கைது செய்யதாக தெரிவித்ததுடன், தாம் எவர் மீதும் தாக்குதல் நடந்த வில்லை எனவும், வேட்டியை கழற்றி அரை நிர்வாண நிலையில் கொண்டு செல்ல வில்லை எனவும் தெரிவித்தனர்.

விசாரணைகளின் முடிவில் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகத்தினர், கடந்த மாதம் 8 ஆம் திகதி சிவாரத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை நெடுங்கேணி பொலிசார் கைது செய்து எம்மை சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து எமது உறவினர்கள் வவுனியா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய 8 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு விசாரணைகள் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்றது.

இதன்போது நாம் அங்கு நடந்த சம்பவங்களை தெளிவாக பதிவு செய்ததுடன், பொலிசார் சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்து பலவந்தமாக அங்கு இருந்தவர்களை வெளியேற்றி கைது செய்தமை மற்றும் கைது செய்த போது வேட்டியை கழற்றி அரை நிர்வாணமாக கொண்டு சென்றதுடன் தாக்கியது தொடர்பிலும் சுட்டிக் காட்டியிருந்ததோம். அத்துடன் ஆலய வழிபாட்டுக்கு அனுமதிக்காமை, ஆலயத்திற்குள் குடிநீர் கொண்டு செல்ல விடாமை உள்ளிட்ட விடயங்களையும் சுட்டிக்காட்டினோம்.

இவை தொடர்பில் கருத்துக்களை கேட்டறிந்த மனிதவுரிமை ஆணைக்குழுவினர், எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குளம் அவை தொடர்பான சான்றுகள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு எம்மிடம் கோரிருந்தனர். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிசாரால் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதையும் சுட்டிகாட்டியிருந்தோம். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கனை மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுமாறும் மனிதவுரிமை ஆணைக்குழுவினர் தெரிவித்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Most Popular