Monday, May 20, 2024

இலங்கை தமிழ் சிறுமிக்கு இந்திய தொலைக்காட்சியில் கிடைத்துள்ள அங்கீகாரம்..! மெய்சிலிர்க்க வைக்கும் ஊர் மக்களின் நெகிழ்ச்சி செயல்

இந்தியாவில் ஒலிபரப்பாகும் பிரபல பாடகர்களுக்கான போட்டி நிகழ்ச்சியில் இலங்கை, மலையகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கலந்து கொண்டுள்ளமை தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கண்டி – புஸ்ஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த அசானி என்ற சிறுமி தனது பாடும் திறமையால் குறித்த போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னரும், தனது பாடசாலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகத் திறமையாக பாடல் பாடியுள்ளதுடன், அது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.

இந்தநிலையில், சிறுமியின் திறமையை அறிந்து கொண்ட பாடசாலை சமூகம், சிறுமி வசிக்கும் பிரதேசத்தில் உள்ளவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து, சிறுமியின் திறமையை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு வகையிலும் உதவி புரிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் ஒலிபரப்பாகும் பிரபல போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர்கள் ஊர்மக்கள் உள்ளிட்டோர் இணைந்து பணம் திரட்டி சிறுமி அசானியை இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இன்றையதினம் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் சிறுமி பாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், அந்த பாடலைத் தொடர்ந்து நடுவர்களாக இருந்த பாடகர்கள் குழாம் அடுத்து வரும் இரு வாரங்களிலும் தொடர்ந்து பாடும் வாய்ப்பை சிறுமி அசானிக்கு வழங்கியுள்ளனர்.

இதேவேளை, சரியான வாய்ப்புக்களும், சந்தர்ப்பங்களும் கிடைக்காமை காரணமாக தனது திறமையை வெளிப்படுத்த களம் தேடிக் கொண்டிருந்த சிறுமியை ஊர் மக்கள் இணைந்து கடல் தாண்டிச் சென்று பாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.

RELATED ARTICLES

Most Popular